லேபிள்கள்

புதன், 16 அக்டோபர், 2024

இரவு நன்றாக தூங்கினீர்களா? கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம்.

ஓய்வுக்கு மட்டுமின்றி நம்முடைய உடலைப் புதுப்பிக்க, பழுதுபார்க்கத் தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மை பிரச்னை பலருக்கும் உள்ளது. தூக்கமின்மை சாதாரண விஷயம் என்று புறக்கணிக்க வேண்டாம். சரியான, ஆழ்ந்த தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை முயற்சி செய்து பார்க்க வேண்டும். என்ன செய்தும் சரியான தூக்கமில்லை என்றால், மருத்துவர்களின் உதவியை நாட தயங்க வேண்டாம்...

நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்குச் சௌகரியமான படுக்கை, தலையணை மிகவும் அவசியம். அடர் இருள் சூழல் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும். அதிக குளிரோ, அதிக வெப்பமோ இல்லாத அளவுக்கு அறை தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். அதிக சப்தம், இரைச்சல் என அதுவும் இல்லாமல் அமைதியான சூழல் இருக்க வேண்டும். படுக்கை அறையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு குறட்டை, அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது போன்ற பிரச்னை இருந்தால் அது மற்றவர்களின் தூக்கத்தைப் பாதிக்கும்.

சரியான தூக்கம் இல்லை என்பதைக் கண்டறிய...

படுத்த உடன் தூக்கம் வர வேண்டும். அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும் நிலை.

ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவான நேரம் மட்டுமே தூங்க முடிகிறது என்றால் அது சரியான தூக்கம் இல்லை.

இரவில் தூங்கும் போது, அடிக்கடி விழிப்பு வருவது.

காலையில் கண் விழிக்கும் போது அதிக சோர்வு, இன்னும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால் இரவில் நல்ல தரமான, ஆழ்ந்த தூக்கம் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பகல் நேரத்தில் படுத்த உடன் தூக்கம் வருவது, நாள் முழுக்க ஆற்றலின்றி, சோர்வுடன், தூக்கக் கலக்கத்தில் இருப்பது எல்லாம் நல்ல, ஆழ்ந்த தூக்கம் இன்மையால் அவதியுறுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அறையின் தட்ப வெப்பநிலை, அறையில் வெளிச்சம் தடுப்பது போன்ற நம்மால் சரி செய்யக் கூடிய காரணிகளைச் சரி செய்துகொள்ள வேண்டும். உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாகத் தூக்கம் தடைப்படலாம். மருத்துவரை அணுகி அதை சரி செய்துகொள்வதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

நல்ல தூக்கம் வர தினமும் காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பது, இரவில் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்க வேண்டும். 10 மணிக்கு படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்றால், அந்த நேரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீறக் கூடாது. படுக்கை டிவி, திரைப்படம் போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் சௌகரியமான, இதமான படுக்கை அறை சூழலை ஏற்படுத்த வேண்டும். இரவு தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். இது போன்றவற்றைச் செய்தால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.



--

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

ஏ.சி பயன்படுத்துவதற்கு யோசி!


கோடைக் காலம் வருவதற்கு முன்பு வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஏ.சி பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

வீடு, அலுவலகம் என 24 மணி நேரமும் ஏசி-யில் இருப்பது சுகமாக இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை. ஏசி-யிலேயே இருப்பதன் மூலம் நம்முடைய உடலின் தகவமைப்பை நாமே சிதைக்கிறோம் என்று அர்த்தம்.

அதிக நேரம் ஏ.சி-யில் இருப்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து போகும். இதனால் கண் எரிச்சல், பார்வை மங்குதல் போன்ற பிரச்னை எழலாம். கண் எரிச்சல், கண் உலர்தல் பிரச்னை உள்ளவர்கள் அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இது கண் பிரச்னையை மோசமாக்கிவிடலாம்.

நீண்ட நேரம் ஏசி-யில் இருப்பதால் தாகம் குறையும். இதனால் உடலில் ஈரப்பதம் குறையலாம். நீண்ட நேரம் குறைந்த தட்ப வெப்ப நிலையில் ஏசி இயங்கும் போது அறையில் உள்ள ஈரப்பதம் உலர்ந்துவிடும். அதன் பிறகு நம்முடைய உடலில் உள்ள ஈரப்பதத்தை ஏசி ஈர்க்க ஆரம்பிக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பிரச்னைகள் ஏற்படலாம். ஈரப்பதம் குறைவதால் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்.

வெளியே அதிக வெப்பமான சூழலில் இருந்து திடீரென்று குளிர்ச்சியான ஏசி அறைக்குள் நுழையும் போது உடல் தன்னை சரி செய்துகொள்ள போதுமான நேரம் கிடைக்காமல் தடுமாறிவிடும். இதன் காரணமாக தலைவலி, நீரிழப்பு போன்ற பிரச்னை வரும். ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு ஏசி பயன்பாடு இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏசி அறை உலர்ந்து, நம்முடைய உடலின் ஈரப்பதத்தை ஏசி ஈர்க்க ஆரம்பிக்கும் போது நம்முடைய மூக்கில் உள்ள ஈரப்பதம் உலர்ந்து நோய்க் கிருமிகள் எளிதாக சுவாச மண்டலத்துக்குள் செல்ல வழிவகுத்துவிடும். இதன் காரணமாக ஏசி அறையில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஏசி-யின் குளிர் மனிதனின் மூக்கு மற்றும் தொண்டையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இதனால் மூக்கடைப்பு, தொண்டையில் தடைகள், வீக்கம், சளி அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

சருமம் உலர்வதால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உலர் சருமம் காரணமாக அரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும்.



--

புதன், 9 அக்டோபர், 2024

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக், கான்கிரீட் கல், ஏஏசி கல், போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும், நம்மூரில் வீடுகட்டுபவர்கள் அதிகம் விரும்புவது செங்கல்லைத் தான்.

அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நமது பழக்கவழக்கம். நம்மூரில் நாம் பார்த்த வீடுகள் அனைத்தும் செங்கல்லில் கட்டப்பட்டவை. அவற்றில் காலம், தரம் ஆகியவற்றை நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அதனால் அவற்றை பயன்படுத்துவதில் சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் மக்கள் தெளிவுடம் உள்ளனர். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள கற்கள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று மக்களுக்கு ஆதாரப்பூர்வமாகத் தெரியாது. அதனால் செங்கல்லையே தேர்வு செய்யும் மக்கள், எப்படி நல்ல செங்கல்லை கண்டுபிடிப்பது? தரமான செங்கல் எது? செங்கல் கட்டுமானத்தில் செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்ன?

தரமான செங்கல்லை கண்டுபிடிக்கும் வழிகள்:

செங்கல்லின் நிறம் பார்த்தாலே தெரியும், நல்ல சிவப்பாக இருக்கிறது என்றால், அந்த செங்கல் நன்றாக வெந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஒரே செங்கல்லின் இரு வேறு பக்கங்களில் இரு வேறு நிறங்களாக இருந்தால் சமமாக வேகவில்லை என்று அர்த்தம், அது நல்ல செங்கல் இல்லை.

செங்கல்லை நம் விரல் நகங்கள் கொண்டு தட்டி பார்க்க வேண்டும், அதி இருந்து மெட்டலை தட்டுவது போன்ற சத்தம் வர வேண்டும். அப்படி வந்தால் அது நல்ல செங்கல்.

செங்கல்லை நம் இடுப்பளவு உயரத்தில் இருந்து தரையில் போட வேண்டும். அப்படி செய்யும்போது உடையாமல் இருந்தால், அது நல்ல செங்கல்.

செங்கல் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டால், அதன் எடை 20 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும், அதற்கு மேல் அதிகரித்தால், அது நல்ல செங்கல் இல்லை, உள்ளே சிறு சிறுதுளைகள் நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

மற்றொரு வழி, நாம் செங்கல்லை வாங்கும்போதே தெரியும். செங்கல்லை ஏற்றும்போதும், இறக்கும்போது, அதனை தூக்கி தூக்கி வீசிதான் கொண்டு வருவார்கள். அப்போது உடையாமல் இருக்கும் செங்கல் எல்லாம் நல்ல செங்கல்தான்.

செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்:

செங்கல்லில் வீடு கட்டுவதனை அதிகமாக மக்கள் விரும்புவதற்கு காரணம், அதன் நம்பகத்தன்மை. பல வருடங்கள் தாங்கும் என்பதை நாமே கண்கூடாக பார்த்து வருகிறோம். புதிய செங்கல்கள் எத்தனை வருடம் வீணாகாமல் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. மற்றொன்று எல்லா மேஸ்திரிகளும், கொத்தனார்களுமே பழகியிருப்பது செங்கல்லுக்குதான். அதனால் ஒரு இன்ஜினியர் இல்லாமல், மேஸ்திரி, கொத்தனார்களை வைத்தே வீட்டை கட்டி முடிக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, நம்மூரில் எளிதில் கிடைக்கும் பொருள் என்பதும், விலை மலிவாக கிடைக்கும் பொருள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

செங்கல்லில் வீடு கட்டும்போது கண்டிப்பாக செங்கல்லை நனைத்துவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது, செங்கல்களில் இடைவெளிகளில் நன்றாக சிமெண்ட் வைத்து அடைத்து கட்ட வேண்டும். அதனை பிறகு பூச்சு வேலை செய்யும்போது சரி ஆகி விடும் என்று விடுவது சரி அல்ல. அப்படி செய்தால், இடையில் இடைவெளி ஏற்பட்டு பிற்காலத்தில் உள்ளேயோ, வெளியேயோ விரிசல் ஏற்படலாம், தண்ணீர் எளிதில் செங்கல்லை நனைக்க துவங்கும். செங்கல் எளிதில் தண்ணீரை பற்றக்கூடியது. ஓரு செங்கல் நனைந்தால் வரிசையாக அனைத்து செங்கற்களும் நனைய தொடங்கும். புதிதாக வந்துள்ள கற்களை பொறுத்தவரையில் இந்த பிரச்சனை இல்லை, அவை பெரிதாகவும் சமமாகவும் இருப்பதால், இடைவெளிக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைவு.

மேலும் செங்கல் வீடு கட்டும்போது அதற்கு ஒரு நாளுக்கு 3 முறை தண்ணீர் ஊற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல், 28 நாட்கள் வரை நனைக்கலாம். ஆனால் பலர் நிறைய தண்ணீர் ஊற்றினால் இன்னும் வலுவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது சரி அல்ல, அளவுகி அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது.

செங்கற்களில் கட்டும்போது அதற்கு நாட்கள் அதிகம் ஆகும், அதனால் ஆள் கூலி அதிகமாகும். புதிய கற்கள் பெரிதாக இருப்பதால் விரைவில் கட்டி முடிக்க முடியும், கொத்தனார் கூலி குறையும். பூச்சு வேலைக்கு சிமெண்ட் அளவு குறைவாகவே தேவைப்படும். எல்லாவற்றிலும் நல்லது கெட்டது உண்டு, உங்கள் தேவைகளுக்கு எது பொருந்துகிறதோ அதனை வாங்கி பயன் படுத்தவும்.



--

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன.

இவற்றில் 4 (1.2 சதவீதம்) பாம்பினங்கள் (நல்ல பாம்பு, கட்டுவரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன்) மட்டும் மனிதர்களின் வாழ்விடங்கள் அருகில் பரவலாக வசிப்பதோடு அதிக மனித இறப்பை உண்டுபண்ணுபவை. இவை இந்தியாவின் முக்கிய நஞ்சுப் பாம்புகளாக உள்ளன. மீதமுள்ள அனைத்து நஞ்சுப் பாம்புகளும் அடர் காடுகள், கடல், குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருவதால் நம் கண்ணில் படுவது அரிது. இவை இரவிலேயே நடமாடுகின்றன. ஆனால், இந்தியாவில் ஆண்டிற்கு சில லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள், பல ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம், கூலி வேலை செய்பவர்கள்.

பாம்புக்கடியின் பாதிப்பு என்பது பாம்பு உடலில் செலுத்திய நஞ்சின் அளவு, நஞ்சின் தன்மை, கடிபட்டவரின் உடல் ஆரோக்கியம், மனநிலை, முறையான உடனடி சிகிச்சை போன்றவற்றைப் பொறுத்து மாறும். பாம்பால் கடிபட்டவருக்குக் கடிவாயில் ரத்தம் கசிதல், வீக்கம், வலி என ஆரம்பித்து இறுதியில் மூச்சுத் திணறல், இதயக் கோளாறு, சிறுநீரகம் செயலிழத்தல் எனப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இதற்கான மருந்தைத் தாண்டி பிரத்தியேக மருத்துவ வசதியும் அனுபவம் பெற்ற மருத்துவர்களும் அவசியம்.

பாம்பால் ஒருவர் கடிபடும்பொழுது முதலில் அவருக்கு ஏற்படுவது பயம், பதற்றம், எதிர்காலம் குறித்த கேள்வி போன்றவையே. பாம்புக்கடிக்கான மருந்து இருப்பதால் நாம் பிழைத்துவிடுவோம் என்கிற நம்பிக்கை முதலில் அவசியம். உடன் இருப்பவர் ஊக்கம் கொடுப்பவராக இருப்பது மிக முக்கியம்.

கடிபட்ட பாம்பிடமிருந்து முதலில் விலக வேண்டும். பாம்பு கடித்த இடத்தையும் நேரத்தையும் அறிந்திருக்க வேண்டும். மருத்துவத்தைப் பொறுத்தவரை உடலில் நஞ்சு இருக்கிறதா என்று அறிந்த பின்னரே சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, கடித்த பாம்பைத் தேடிக் கொல்வதும் அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதும் அவசியமற்றது. இது தேவையற்ற நேர விரயமே.

பாம்புக்கடியின்போது பாம்பின் நஞ்சு உடலில் பரவுவது நீரில் நீலம் கலப்பது போன்றதுதான். நஞ்சை மட்டும் உடலிலிருந்து பிரித்தெடுப்பது இயலாத காரியம். முதலுதவி என்ற பெயரில் கடிவாயை வெட்டி விடுதல், வாய் வைத்து உறிஞ்சுதல், கயிற்றால் கடிவாய் மேலே கட்டுதல் ஆகிய தவறான செயல்களைப் பலர் மேற்கொள்கிறார்கள். இது கூடுதல் பிரச்சினையை உண்டுபண்ணுமே தவிர, எந்தப் பலனும் தராது.

நேரம் தாழ்த்தாமல் உடனே அரசு மருத்துவமனையின் பாம்புக்கடி தீவிர சிகிச்சைப் பிரிவை அடைந்து, உரிய சிகிச்சையைப் பெற வேண்டும். ஓடுவதைத் தவிர்த்தல், இறுக்கமான ஆடைகளைக் களைவது, கடிபட்ட இடத்தில் ஆபரணங்கள் அணிந்திருந்தால் கழற்றிவிடுவது அவசியம்.

அரசு, சில தனியார் மருத்துவமனைகளில் பாம்புக் கடிக்கான சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இன்று பாம்புக்கடிகளுக்கு எதிராக நஞ்சுமுறிவு மருந்து (Anti Snake Venom), கூட்டு முறை (Polyvalent) வடிவில் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் முக்கிய நான்கு நஞ்சுப்பாம்புகளுக்கு மட்டுமானது.

இந்த மருந்துகள் அறிமுகமாவதற்கு முன்பும் பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது சார்ந்த பல மருத்துவக் குறிப்புகள் வாய்மொழியாகவும் இந்திய மருத்துவ முறைகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்து, கூடுதல் ஆராய்ச்சி மேற்கொண்டாக வேண்டும்.

இன்றைய உடனடித் தேவை பாம்புகளால் கடிபட்டு வருவோரை நஞ்சுப்பாம்புதான் கடித்திருக்கின்றதா, அது எவ்வகை பாம்பு எனச் சுலபமாகக் கண்டறியும் கருவியை (venomous snakebite detection kits) கண்டுபிடிப்பதும் அவசியம்.

முள்ளை நாம் பார்க்காமல் காலில் குத்திக்கொண்டு, காலில் முள் குத்திவிட்டது என்று முள்ளின் மீது பழிபோடுவது போலத்தான் பாம்பு என்னைக் கடித்துவிட்டது என்பதும். மக்கள்தொகை பெருக்கம், பாதுகாப்பற்ற குடியிருப்பு, மருத்துவத்திற்கான தொலைதூரப் பயணம், மருத்துவச் செலவு, அறியாமை, அலட்சியம் என எல்லாம் சேர்ந்து பாம்புக்கடியைத் தீவிர பிரச்சினையாக மாற்றியிருக்கின்றன. இது குறித்த அடிப்படை அறிவோடு நம் அனைவரின் பங்களிப்பும் சேரும்பொழுது பாம்புக் கடிகளைக் குறைப்பதோடு, இறப்பையும் தவிர்க்க முடியும்.

கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர்.



--

வியாழன், 3 அக்டோபர், 2024

உடல் நலனும் மன நலமும்: பதற்றமாக இருக்கிறதா? உங்களுக்கு கை கொடுக்கும் 3 வழிகள்.

தேர்வு, காலக்கெடு, பணிக்கான நேர்காணல், ஒன்றை தொகுத்து வழங்குவது போன்ற செயல்பாடுகள் பொதுவாகவே உங்களை மிகவும் பதற்றமாக்கும்.

நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய தருணத்தில், உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம்; உங்கள் உள்ளங்கை வியர்க்கலாம்; உங்கள் குரல் வித்தியாசமாக மாறலாம்; உங்கள் மூளை இருண்டுப்போகலாம்.

நரம்பியல் அறிவியலின் படி, உங்களை நீங்களே இயல்பாக்கிக்கொள்ள மூன்று எளிய, நம்பக்கூடிய உத்திகள் இருக்கின்றன; நீங்கள் எவ்வளவு பதட்டமாக இருந்தாலும், இந்த உத்திகள் உங்களை அமைதியாக்கி, முன்நடத்தி செல்லும்.

மன அழுத்ததை எதிர்கொள்ள நிச்சயமாக வேறு பல உத்திகள் உள்ளன; ஆனால், இந்த மூன்று உத்திகளும் உங்களுக்கு உடனடி தீர்வை தரும்.

மூச்சுப் பயிற்சி

முதலில் மூச்சுப்பயிற்சி - நீங்கள் உங்கள் மூக்கு வழியாக ஐந்து நொடிகள், ஆழமாக, நன்றாக மூச்சை இழுங்கள். அதை ஒரு நொடி பிடித்து வையுங்கள். பின்னர், இழுத்துப் பிடித்திருக்கும் காற்றை உங்கள் மூக்கு வழியாக, ஒன்றிலிருந்து ஐந்து வரை எண்ணிக்கொண்டு, மெதுவாக வெளியில் விடுங்கள். இப்படி சில முறை செய்யுங்கள். நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக, நம் உடலின் நரம்பியல் அமைப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, யோகிகளும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மூச்சுப் பயிற்சி உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவியல் புரிந்துக்கொள்ள தொடங்கியுள்ளது.

ப்ரீ-பாட்ஸிங்கர் அமைப்பு (PRE-BOTZINGER COMPLEX) - மன அழுத்தத்துடன் இருக்கும் போது, மிகவும் வேகமாக மூச்சை விடுவோம். அதனால், நம் உடல் ஆபத்தில் இருப்பதற்கு தயாராகும். இது நாம் ஓடி செல்ல உதவலாம். ஆனால், பொதுவெளியில் பேச தயாராகும்போது உதவி செய்யாது.

நாம் மூச்சை ஆழமாகவும் மெதுவாகவும் விடும்போது, 'ஆபத்தில்' இருந்து' எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று நம் மூளைக்கு இதன் மூலம் செய்தி சென்றடைகிறது. அதனால், அடுத்த முறை உங்களின் பதட்டம் அதிகரித்தால், உங்கள் மனநிலையை அமைதியாக்க, நீங்கள் ஆழமாக மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இதை யாரும் கவனிக்க மாட்டார்கள்; நீங்கள் மேடையில் நின்றாலும், பார்ப்பவர்களுக்கு அது தெரியாது.

இப்போது, நீங்கள் இசையை மனதுக்குள்ளேயே பாடத் தயாராகுங்கள். ஒரே ஒரு இசை சுரத்தையோ உங்களுக்கு விருப்பமான இசையையோ என எதை வேண்டுமானாலும் பாடலாம். ஏன் தெரியுமா?

நம் உடலின் பெரிதும் அறியப்படாத மிக முக்கிய பாகமாக 'வேகஸ் நரம்பு' (vagus nerve) உள்ளது. இசையை மனதுக்குள் பாடுவதன் மூலம் இதயத் துடிப்பு சீராகுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி செய்வதற்கு லத்தீன் மொழியில் 'அலைந்து திரிவது' என்று பொருள் தரும். ஏனெனில் இது மூளையில் இருந்து வெளிப்பட்டு, தகவல்தொடர்புக்கான ஒரு துரிதமான பாதை போல உடலில் மேலும் கீழும் வளைந்து, இதயம், நுரையீரல் மற்றும் வயிறு, குரல் பகுதி, காதுகள் போன்ற உறுப்புகளுடன் மூளையை இணைக்கிறது.

2013ஆம் ஆண்டு பாடகர்கள் பற்றிய ஆய்வில், பாடுவது, ஹம்மிங் செய்வது பக்தி மந்திரங்கள் கூறுவது அனைத்தும் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகின்றன என்பதைக் காட்டுகிறது.

அதனால், அடுத்த முறை உங்கள் இதயம் வேகமாக துடிக்கும் போது ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது ஒரு பாடல் குறிப்பை முணுமுணுத்து, உங்கள் நாடி நரம்புகளை அமைதியாக்குங்கள்.

இறுதி உத்தி, கவனம் செலுத்துவது. நீங்கள் பிஸியாக இருக்கும்போது பல பணிகளைச் செய்யத் தோன்றும். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து உண்மையில் செய்ய வேண்டியவற்றை முடிக்க வேண்டுமெனில், ஒரே சமயத்தில் பல பணிகளைச் செய்யாதீர்கள். உங்கள் மூளை ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே

நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யும் போது, நீங்கள் மிக வேகமாக மாறி மாறி வேலை செய்ய வேண்டும். மேலும், இதனால் ஏற்படும் அதிகப்படியான தூண்டுதலால் உங்கள் உடல் மன அழுத்த ஹார்மோன்களால் நிரப்புகிறது.

உங்கள் மூளையை இணைக்கும் விதத்தில் வேலை செய்வதன் மூலமும், ஒரு நேரத்தில் ஒரு செயலை செய்வதன் மூலம், நீங்கள் சோர்வுற்ற உணர்விலிருந்து விரைவாக அமைதி பெறலாம்.

அதனால், உங்கள் பணியை சிறிய பகுதிகளாகவோ அல்லது படிப்படியாக பிரித்தோ செய்யுங்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற பணிகளை அவற்றின் நேரம் வரும் வரை மறந்து விடுங்கள். இது சில நேரங்களில் 'செயல்முறை சிந்தனை' என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த அவர்களின் பயிற்சியாளர்கள் இந்த உத்தியை பயன்படுத்துவார்கள்.



--

இரவு நன்றாக தூங்கினீர்களா? கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் அவசியம். எந்த வயதினராக இருந்தாலும் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவச...

Popular Posts