லேபிள்கள்

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஏ.டி.எம் கார்டில் பாதுகாப்பு அவசியம். இல்லையேல் Block..Block.. கவனமாக இருங்கள்.

ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா?

இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏ.டி.எம் கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏ.டி.எம் கொள்ளைகளும், பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதே... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.

அவ்வாறு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது? என்ற விவரங்கள் தெரியுமா? தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே...!!

முதலில் பிளாக் செய்யுங்கள்:

நீங்கள் உங்களது ஏ.டி.எம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன.

பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.

மேலும் பின் நம்பரை அறிந்து கொள்ள இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.

எவ்வாறு பத்திரமாக பார்த்துக்கொள்வது?

உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது.

பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.



--

சனி, 26 ஜூலை, 2025

முழு முட்டை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு - எது ஆரோக்கியமானது?

முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமா அல்லது முழு முட்டையும் சாப்பிடலாமா? இது ஒரு விடையில்லா கேள்வி. முட்டையின் வெள்ளைக்கரு மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறினாலும், பலர் அதை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

மஞ்சள் கரு முக்கியமாக கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

ஒரு முட்டையின் பிரகாசமான மஞ்சள் கருவைச் சுற்றியுள்ள வெள்ளை திரவமானது, சுமார் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதத்தால் ஆனது. பயோட்டின் பிணைப்பு புரதமான அவிடின் அவற்றில் உள்ளது. அதேநேரம், மஞ்சள் கரு கொழுப்பு மற்றும் சில புரதங்களால் ஆனது. அவை பயோட்டின் உட்பட பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன.`

நீங்கள் முடிவெடுப்பதற்கு முன், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.

முழு முட்டைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் வளமான ஆதாரம் மட்டுமல்ல, இதில் புரதம் மற்றும் கலோரிகள் அதிகளவில் உள்ளன. மறுபுறம், முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது இங்கே

முழு முட்டை உடலுக்கு அதிக புரதத்தை அளிக்கும் அதே வேளையில், அவை அதிக கலோரிகளையும் கொண்டு வருகின்றன.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதம் 'உயர்தர முழுமையான புரதம்' என்றும் கருதப்படுகிறது, அதாவது உடலுக்குத் தேவையான அளவு ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.

எப்படி தேர்வு செய்வது?

முழு முட்டைகளை உண்பது, உங்களை முழுதாக உணர வைப்பதோடு குறைவான கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒப்பிடும்போது இது ஊட்டச்சத்துக்களில் அதிக நன்மை பயக்கும் என்றும் அறியப்படுகிறது.

தசையைப் பராமரிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும், உணவில் போதுமான புரதத்தைப் பெறுவது அவசியம், குறிப்பாக ஒருவர் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது. இதைக் கருத்தில் கொண்டு, எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த வழி என்று கூறலாம்.

முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அனைத்தும் மஞ்சள் கருவில் காணப்பட்டாலும், முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் அவற்றில் கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையும் இல்லை.

முட்டையின் வெள்ளைக்கரு' அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கவர்ச்சியான தேர்வாக இருக்கும், ஆனால் விளையாட்டு வீரர்கள் அல்லது பாடி பில்டர்கள் போன்றவர்கள் அவர்களின் கலோரி உட்கொள்ளலைக் கவனிக்க வேண்டும்.



--

புதன், 23 ஜூலை, 2025

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை!

சாப்பிட்ட பின் மறந்தும் கூட செய்யக் கூடாத சில செயல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை உடல நலத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.

இது கோடை காலம் என்பதால், குளிப்பது மிகவும் புத்துணர்ச்சியைத் தரும். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, பெரும்பாலானோர் மூன்று முதல் நான்கு முறை குளிக்கிறார்கள். சிலருக்கு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இவை உடப சில பொதுவான தவறுகள் நோயை வரவேற்கும் செயல்கள்.

சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது

சிலருக்கு சாப்பிட்ட பின் குளிக்கும் வழக்கம் உள்ளது. இரவில் சாப்பிட்ட பின் குளிக்கும் அந்த தவறை செய்யக்கூடாது. இப்படி செய்வது பல நோய்களுக்கு வரவேற்பை அளிக்கும் செயல் என்று சொல்லலாம்.

உணவு உட்கொண்ட பிறகு குளிக்கும் பழக்கம் பெரும் உடல நல பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உங்கள் எடையும் அதிகரிக்கலாம் . அதோடு அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இதைத் தவிர, இதுபோன்ற சில பழக்கவழக்கங்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக நீங்கள் பல நோய்களின் பிடியில் செல்லலாம்.

காலை உணவாக இருந்தாலும் சரி, இரவு உணவாக இருந்தாலும் சரி, சாப்பிட்ட உடனேயே குளிக்கக் கூடாது. இதைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். குளித்த பிறகு, உடல் வெப்பநிலை உயர்கிறது, இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது.

சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம்

பெரும்பாலானோர் சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடுவார்கள். இதைச் செய்வதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில், இதைச் செய்வது உங்களுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

உணவுக்குப் பிறகு புகைபிடித்தல்

சிலருக்கு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இதை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். அப்படி செய்தால் உடல் எடை கூடும்.

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது

சிலருக்கு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வரும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலால் உணவை சரியாக ஜீரணிக்க முடியாது. இது உங்கள் செரிமானத்தை கெடுக்கும். அதனால்தான் சாப்பிட்ட உடனேயே 10-15 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.



--

சனி, 19 ஜூலை, 2025

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில வழிமுறைகள்:

தலையில் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.

வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். நுங்கு, இளநீர், மோர் போன்றவற்றை வாங்கி குடிக்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலும் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படும். மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் இருக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



--

புதன், 16 ஜூலை, 2025

சிலிண்டர் எப்படி வெடிக்கிறது? அதற்கான காரணங்கள்.

நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப் பட்டிருப்பீர்கள்.

எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.

கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது. சிலிண்டர் என்பது தற்போது அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

அதில் முதலாவது நாம் சிலிண்டரை முறையாக கையாளாமல் இருப்பதால் வெடிக்கின்றது. அதாவது சிலிண்டருக்கும் அடுப்புக்கும் பயன்படுத்தப்படும் வயர்கள் பழுதடைந்த காரணத்தினால் அல்லது எலிகள் அந்த வயர்களை கடித்து இருந்தால் அதன் மூலம் வெளியேறும் எரிவாயு மூலமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

இரண்டாவது காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இப்போது நாம் எப்படி சிலிண்டர் காலாவதியாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரை A-07, B-06 என்று எழுதப்பட்டிருக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரைக்கும், B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரைக்கும், C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும், D அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும், அடுத்து உள்ள இரண்டு எண்கள் வருடத்தைக் குறிக்கும். உதாரணதிற்கு சிலிண்டரில் B -21 என்று இருந்தால் அந்த சிலிண்டரை(கேஸ் இல்லை) 2021 ஜூன் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்த்தம். எனவே சிலிண்டர் வாங்கும் போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்.



--

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும்... - அழித்து வரும் ஆரோக்கியமும்....!

க்ரைண்டர் மாவுக்கும், மிக்சி சட்டினிக்கும் பழகிபோன என் நாக்கிற்கு ஒரு நாள் என் பாட்டி புதுவிதமான சுவை அளித்தார் என்றால் அது மிகையாகாது.

நாமது வாழ்கையில் பெரும்பாலும் சுவையான உணவை சாப்பிடவே உடலை வருத்தி உழைக்கிறோம். ஆனால், அந்த சுவை துரித உணவுகளின் கையேந்தி பவனிலும், வீட்டில் அரைக்கும் மிக்சி சட்டினியிலுமே முடிந்து விடுகிறது. அன்று ஒரு நாள் பாட்டி ஆட்டுக்கல்லில் மாவாட்டிக்கொண்டு இருந்தார். ஒரு கையில் குளவி மறு கையில் மாவை தள்ளி விட்டவாறு அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார். நான் பாட்டியிடம் எதற்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, க்ரைண்டரில் போட்டால் பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும் உனக்கும் கை வலி இருக்காது என்று சொன்னேன்.

73 வயதான என்பாட்டி என்னிடம் இன்றும் நான் ஆரோக்கியமாக இருக்க இந்த ஆட்டுக்கலும், அம்மிக்கலும்தான் காரணம் என சொன்னார். அடுத்த நாள் காலையில் அடுப்பில் இரும்பு கல் வைத்து வாழை தண்டில் என்னை தொட்டு கல்லில் தேய்த்து சொய் என்ற சத்தத்தோடு மாவை கல்லில் ஊற்றி பரத்தி விட்டு சுட்ட அந்த தோசையின் மனம்.. எங்கேயோ நின்றுகொண்டிருந்த என் மூக்கை துளைத்து சுவையின் நரம்புகளை தூண்டி விட்டது. அதனோடு சேர்த்து மிளகாய் வருத்து சின்ன வெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்த அந்த காரச்சட்டினி.. அப்பப்பா.. அந்த சுவைக்கு நான் இன்றும் அடிமைதான்.

ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த உணவு பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது என்பது வருத்தத்தைதான் தருகிறது. பல ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்து ஜிம்மிற்கு சேன்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறை.., பழங்கால பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் என்பதை கண் மூடித்தனமாக மறுத்து வருகிறது. இன்றும் பல கிராமங்களில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ள வீடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

அம்மியில் அரைக்கும்போது அந்த உணவுக்கு குளுர்ச்சி கிடைத்து உணவின் பக்குவமும், சுவையும் மாறாமல் கிடைக்கிறது. அதனுடன் கல்லோடு கல் உரசி அதனோடு உணவுப்பொருட்களும் அரைபடும்போது அந்த கல்லில் இருக்கும் சத்துக்களும் இயற்கையாகவே உடலுக்குள் செல்கிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பலனை தருகிறது. எதிர்கால தலைமுறை இந்த அவசரமான வாழ்கை நடைமுறைக்கு இடையே கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொண்டால் அழிந்து வரும் அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும் மறு வாழ்வு பெரும்.


--

புதன், 9 ஜூலை, 2025

முட்டைகளைதண்ணீரில் கழுவக்கூடாது. எச்சரிக்கும் நிபுணர்கள்.

சமைப்பதற்கு முன் எந்த பொருளையும் கழுவுவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், காய்கறி பழங்களை போலவே பலர் முட்டைகளை தண்ணீரில் கழுவும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல.

அமெரிக்க வேளாண்மைத் துறை, முட்டைகளை தண்ணீரில் கழுவுவது சரியல்ல என எச்சரித்துள்ளது. அனைத்து முட்டைகளும் தேவையான அளவிற்கு சுத்தம் செய்யப்பட்ட பின்பே விற்பனைக்கு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அதை மீண்டும் வீட்டில் கழுவும்போது,     இந்த செயல்முறை முட்டையின் மேற்பரப்பில் இருந்து 'க்யூட்டிகல்' அல்லது 'ப்ளூம்' எனப்படும் அடுக்கை நீக்குகிறது.

கோழிப்பண்ணையில் முட்டைகளை கழுவும் முறை

அமெரிக்க வேளாண்மைத் துறை இது குறித்து மேலும் கூறுகையில், கோழி முட்டைகளை கழுவியவுடன், அதன் மீது உண்ணக்கூடிய கனிம எண்ணெய் பூசப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், எந்த பாக்டீரியாவும் முட்டையை மாசுபடுத்தாது, முட்டையின் உள்ளே நுழைய முடியாது. முட்டை ஓடு நுண்துளையாக இருப்பதால், முட்டையை தண்ணீரில் கழுவினால், பாக்டீரியா முட்டைக்குள் நுழையும். முட்டைகளை தண்ணீரில் கழுவக்கூடாது என்பதற்கான காரணம் இதுதான்.

முட்டைகளை கழுவ சரியான வழி

நீங்கள் பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் முட்டைகளை வாங்கினால், முட்டைகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் முட்டைகளை கழுவாமல் சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். முட்டையைக் கழுவினால் முட்டை கெட்டுப்போவது மட்டுமின்றி ஆரோக்கியமும் கெடும். எனவே, முட்டையை கழுவ வேண்டாம். அப்படி உங்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என தோன்றினல், ஈரமான துணியால் சுத்தம் செய்த பிறகு பயன் படுத்தவும்.



--

ஞாயிறு, 6 ஜூலை, 2025

துப்பாக்கியால்வானத்தை நோக்கி சுட்டால் அந்த குண்டு என்னவாகும்.?


துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும்போது மேலே செல்லும் குண்டுகள் என்னவாகும். அது திரும்பவும் பூமியை நோக்கி வரும் போது நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

இதைப்பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்படும் புல்லட் 3 கிலோமீட்டர் வரைக்கும் நேராக விண்ணை நோக்கி செல்லும். அதன்பிறகு புவியீர்ப்பு விசையின் காரணமாக அது மீண்டும் பூமியை நோக்கி திரும்பும்போது, வேகம் சற்று குறைவாக இருக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 400 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கித் திரும்பும். அது யார் மீதாவது பட்டால் கட்டாயம் காயத்தை ஏற்படுத்தும். ஏன் உயிரே போவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இதுபோல் வானத்தை நோக்கி சுடப்பட்ட புல்லட்டுகளால் இதுவரை பல மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாகவே பல நாடுகளில் பண்டிகைகளின் பொழுது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொருத்தவரை பெரும் தலைவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த துப்பாக்கிகளில் இருந்து வெளியாகும் குண்டுகள் போலியானவை என்றும், அவை வெடி சத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. இருப்பினும் சில அதிபுத்திசாலி நபர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கிகளை கொண்டு வானத்தை நோக்கி சுடுகின்றன. இதனால் பலருக்கும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது. ஆனால் இந்தியாவில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள்.



--

வியாழன், 3 ஜூலை, 2025

பாடி லோஷன் எப்படி பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாகவே சிலருக்கு எந்நேரமும் சரும வறட்சி இருக்கும். அதிலும் கோடை காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து உடல் முழுவதுமே பெரும்பாலானோருக்கு வறட்சியாகக் காணப்படும்.

இந்த சூழ்நிலையில் உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன்(உடலில் தடவும் திரவம்/கிரீம்) பயன்படுத்துவது அவசியம். பெண்கள் அதிகமாக இதனை பயன்படுத்தினாலும் சிலர் சரியான முறையில் அதனை உபயோகிப்பதில்லை.

பாடி லோஷன் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம்.

மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம்.

அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள்.

குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.

முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.



--

ஞாயிறு, 29 ஜூன், 2025

வஜ்ராசனத்தின் செயல் முறையும்நன்மைகளும்.


செயல்முறை:

யோகா விரிப்பில் முழங்கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து,இரு குதி கால்களையும் ஒன்று சேர்த்து பிட்டங்களை குதிகால்கள் மீது வைத்து அமரவேண்டும்.[ படத்தை கவனிக்கவும்]

கைகள் முழங்கால்கள் மீது வைத்திருக்க வேண்டும்.

ஆசன நிலையில் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்

எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஆசன நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும்

குதிகால்கள் மீது அமர முடியாதவர்கள்,குதிகால்களின் பக்கவாட்டில் அமரலாம் .

வஜ்ராசனத்தின் நன்மைகள்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது. மற்றும் வழக்கமான பயிற்சி நடைமுறையில், இது மலச்சிக்கலை நீக்குகிறது.

வயிற்று புண்கள் மற்றும் அமிலத்தன்மையைத் தடுக்கிறது.

முதுகை பலப்படுத்துகிறது மற்றும் முதுகு பிரச்சினைகள் மற்றும் சியாட்டிகா பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

இடுப்பு தசைகளையும் பலப்படுத்துகிறது. பிரசவ வலியை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் பிடிப்பைக் குறைக்கிறது.

தியான நிலைக்கு மிகச் சிறந்த ஆசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

வஜ்ராசனம் நிலையான, உறுதியான முதுகெலும்பை தரும் .

இந்த ஆசன நிலையில்உட்கார்ந்துகொள்வது மிகவும் சவாலானது.

வஜ்ஜிராசனத்தில் தேர்ச்சி பெற்று, தியான நிலையில் நுழைய பயிற்சியாளர் கால்களில் உள்ள வலியையும் மனதில், அமைதியின்மையையும் வெல்ல வேண்டும்.

தங்களைத் தாங்களே பயிற்றுவிக்க வேண்டும், அதில் தங்கள் மனதை முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும்.

வஜ்ராசனம் கீழ் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

கால்களில் உட்கார்ந்திருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து செரிமான பகுதியில் அதிகரிக்கிறது, எனவே செரிமான அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும்.



--

வியாழன், 26 ஜூன், 2025

காண்டாக்ட் லென்ஸ் யாரெல்லாம் அணியலாம்? கவனிக்க வேண்டியவை என்னென்ன?

``பார்வை என்பது கண்களின் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் பலரும் பார்வையில் பிரச்னைகள் இருந்து, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்பட்ட பிறகும் தோற்றத்தின் மீது கொண்ட அக்கறையால் கண்ணாடியைத் தவிர்க்கிறார்கள்.

40 ப்ளஸ்ஸில் உள்ள பலரையும் கவனித்துப் பாருங்கள். செல்போனிலோ, புத்தகத்திலோ உள்ள எழுத்துகளைப் படிக்கும்போது கண்களைச் சுருக்கியோ அல்லது அவற்றைத் தள்ளிவைத்துப் பிடித்தபடியோ வாசிப்பதைப் பார்க்கலாம். கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பது சாமர்த்தியமான முடிவல்ல, உங்களுக்கு நீங்களே சங்கடங்களை அதிகப்படுத்திக்கொள்கிற விஷயம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

 சிறப்பு மருத்துவர் வசுமதி

கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் வந்தால் அதைத் தவிர்க்கக் கூடாது என்று வலியுறுத்துகிற டாக்டர், கண்ணாடிக்கு பதில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது சிறந்த முடிவாக இருக்கும் என்பதையும் சொல்கிறார். கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் அவர் விளக்குகிறார்.

``கண்களில் ஏதோ பிரச்னை காரணமாக கண்ணாடி போட வேண்டிய நிலை வரலாம். இப்போதெல்லாம் கண்ணாடிக்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ் அணிவதையே பலரும் விரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். உங்களில் பலருக்கும் கான்டாக்ட் லென்ஸ் எப்படி இருக்கும் என்று தெரிந்திருக்கும். கருவிழியின் வடிவத்திலேயே ட்ரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் லென்ஸை அதற்கான பிரத்யேக திரவத்தை உபயோகித்து சுத்தப்படுத்திய பிறகு விரலால் கண்களுக்குள் சுலபமாகப் பொருத்திக் கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சினிமா நடிகர் நடிகைகளும், மாடல்களும் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் உபயோகித்து வந்தார்கள். இப்போது சாமானிய மக்களுக்கான பயன்பாடாக அது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் ஹார்டு லென்ஸாக வந்துகொண்டிருந்தது, பிறகு செமி சாஃப்ட் லென்ஸாக வந்தது. இப்போது சாஃப்ட் லென்ஸ் கிடைக்கிறது. கான்டாக்ட் லென்ஸில் யூனிஃபோக்கல் மற்றும் மல்டி ஃபோக்கல் என இரண்டு வகை உள்ளது. இதில் யூனிஃபோக்கல் வகை லென்ஸ் குறிப்பிட்ட ஒரு பார்வையை, அதாவது தூரத்துப் பார்வையை மட்டும்தான் சரி செய்யும். அதுவே மல்டி ஃபோக்கல் லென்ஸானது தூரப்பார்வை, கிட்டப்பார்வை, நடுப்பார்வை என எல்லாவற்றையுமே சரிசெய்யும். 40 வயதுக்கு மேலானவர்கள் இதைப் பயன் படுத்தலாம்.

கண்ணாடி அணிவதில் உள்ள சிரமங்கள் இதில் இருக்காது கண்ணாடி அணிவதால் தன் தோற்றம் மாறிப் போகுமோ என்ற கவலை இருப்பவர்கள் கான்டாக்ட் லென்ஸை தேர்வு செய்யலாம். கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கும்போது பார்வையின் தரமும் நன்றாக இருக்கும். சிலர் வெறும் அழகுக்காக மட்டும் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பதுண்டு. அப்படி உபயோகிக்கும்போது அதைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதை மறந்துவிட்டு அப்படியே தூங்கி விட்டாலோ அல்லது லென்ஸ் போடுவதற்கு முன்பே கண்களுக்கு மஸ்காரா உள்ளிட்ட மேக்கப் சாதனங்களை உபயோகித்தாலோ அது கண்களில் இன்பெக்ஷனை ஏற்படுத்தலாம். கான்டாக்ட் லென்ஸில் புரதச்சத்து சேர்ந்து, இன்ஃபெக்ஷனாகி லென்ஸ் போட்டாலே கண்களில் எரிச்சல், கண்களைக் கசக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படலாம். லென்ஸை கழற்றிய பிறகும் கண்களில் அரிப்பும் எரிச்சலும் இருப்பதாக உணர்வார்கள். இதை Giant Papillary Conjuntivitis - GPC என்று சொல்வோம். எனவே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதை முறையாக அதற்கான திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. லென்ஸ் வைப்பதற்கென கொடுக்கப்படும் பெட்டிக்குள் அதை ஃப்ரெஷ்ஷான திரவத்தில் ஊறவைக்க வேண்டும்.

வெளியே செல்லும்போது லென்ஸை சுத்தப்படுத்தும் திரவத்தை எடுத்து வர மறந்து விட்டதால் சிலர் எச்சிலைத் தொட்டு சுத்தப்படுத்தி அப்படியே பயன்படுத்துவதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் மிகவும் தவறானது. கான்டாக்ட் லென்ஸ் என்பது கருவிழியின் மேல் பொருத்தப்படுவது. எனவே அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் இன்ஃபெக்ஷன் ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி பார்வையையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தில் முடியலாம். முறையாக பயன்படுத்துவோருக்கு கான்டாக்ட் லென்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம். சிலபேருக்கு 'ஆஸ்டிக்மேட்டிசம்' (Astigmatism) எனப்படும் சிலிண்டர் பவர் இருக்கும். அந்தப் பிரச்னைக்கெனவே பிரத்யேக கான்டாக்ட் லென்ஸ் இருக்கிறது. சாதாரண லென்ஸைவிட சற்றே விலை அதிகம் என்றாலும் இந்த லென்ஸ் மிகுந்த பலனைத் தரக்கூடியது.''



--

ஏ.டி.எம் கார்டில் பாதுகாப்பு அவசியம். இல்லையேல் Block..Block.. கவனமாக இருங்கள்.

ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா ? இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில் , ஏ.டி.எம் கார்டுகளை ப...

Popular Posts