லேபிள்கள்

வெள்ளி, 16 ஜனவரி, 2026

சளிபிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு உண்மையானது?

சளி பிடித்திருந்தால் வேறு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சாதாரண ஜலதோஷம் என்றால் பாலைக் காய்ச்சி அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு, குங்குமப்பூ எல்லாம் சேர்த்து சூடாகக் குடிப்பது மிகவும் நல்லது. அதுவே நெஞ்சு சளியாக இருந்தால், பால் குடிப்பதன் மூலம் சளி சுரப்பது அதிகரிக்கலாம் என்பதால் பாலைத் தவிர்க்கும்படி ஆயுர்வேதத்தில் சொல்லப் படுகிறது.

சளி பிடித்திருக்கும் போது முடிந்தளவுக்கு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசத்தையே சூப் மாதிரி குடிக்கலாம். காய்கறிகளை வேகவைத்த நீர் குடிக்கலாம். சூப் நல்லது, ஆனால் பாக்கெட்டுகளில் வரும் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸில் தயாரித்த சூப்பை தவிர்க்கவும். காய்கறிகளை வேகவைத்து அரைத்து, கெட்டியான சூப்பாக குடிக்கலாம். எந்த உணவாக இருந்தாலும் நன்கு கொதிக்கவைத்தும், சூடாகவும் சாப்பிடுவது நல்லது.

சளி பிடித்திருக்கும் போது சிலருக்கு இருமலும் சேர்ந்துகொள்ளும். குறிப்பாக படுத்திருக்கும் நிலையில் அது தொண்டைப் பகுதியை மிகவும் எரிச்சலடையச் செய்யவும். வாய் வறண்டு, இருமல் அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலையில் இரவு தூங்கச் செல்வதற்கு முன் மஞ்சள்தூள், வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் குடிக்கலாம்.



--

செவ்வாய், 13 ஜனவரி, 2026

நரைமுடி, பொடுகு மற்றும்தலைப்பேன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!

சீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி இது முடியில் உள்ள எண்ணெய் பசையை போக்கவும், முடிக்கு போஷாக்கு அளிக்கவும் உதவுகிறது.

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தலுக்கு பளபளப்பை தருகிறது. ஆயுர்வேத ஷாம்புகள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் சீகைக்காய் முக்கியமானது.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

சீகைக்காய் பேஸ்ட்டை உருவாக்க, 2-3 டீஸ்பூன் சீகைக்காய் பொடியை 2 கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். கூடுதல் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை கூந்தலில் தடவி பிறகு நீரில் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி வர பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

சீகைக்காய் தூளுடன் தயிர் சேர்த்து குழைத்து உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு அப்ளை செய்து வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். . இது முடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தல், முடி சேதம் இவற்றை தடுக்கிறது.

சீகைக்காய் காய்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் லெமன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கூந்தலில் அலசி வர பொடுகு மற்றும் பேன்களில் இருந்து விடுபட முடியும்.

சீகைக்காய் தூள் மற்றும் தயிரை சேர்த்து உச்சந்தலையில் தடவி வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது பிளவுபட்ட முடிகள், முடி உதிர்தலை தடுக்கிறது. சீகைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். அந்த தண்ணீரை கொதிக்க வைத்து காலையில் எழுந்ததும் அதைக் கொண்டு கூந்தலை அலசுங்கள்.இது கூந்தலுக்கு இயற்கையாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மேலும் பளபளப்பான தோற்றத்தை அளிக்க உதவுகிறது.

அரை கப் கற்பூர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் வேப்பிலை தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் சீகைக்காய் தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, மிகவும் கெட்டியாக இருந்தால், மேலும் இரண்டு துளிகள் எள் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள் . இதை அப்ளை செய்த பிறகு 20-30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசி வாருங்கள். இது தலையில் பேன் உருவாகுவதை தடுக்கிறது.

2-3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி சேர்த்து குழைத்து உச்சந்தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து வாருங்கள். பிறகு 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிட வேண்டும். வாரத்திற்கு 1-2 முறை இதை செய்து வாருங்கள்.



--

வெள்ளி, 9 ஜனவரி, 2026

வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள்.

 பல் சுகாதாரம் என்பது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அதனால்தான், ஏதேனும் பல் பிரச்சனைகள் ஏற்பட்டால், மூல காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியம்.

ஆனால் சில நேரங்களில், எளிமையான விஷயங்களைச் செய்வது நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும் - அவற்றில் ஒன்று, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேப்பங்குச்சியால் பல் துலக்குவது.

ப்ரெஷ்னர்களை நம் வாயில் தெளிப்பது முதல் சுயிங்-கம் வரை, வாய் புத்துணர்ச்சிக்காக நாம் அனைத்தையும் செய்கிறோம். ஆனால் இந்த விரைவான தீர்வுகள்' மூல காரணத்தை தீர்க்காது.

பல நன்மைகளைக் கொண்ட வேப்பங்குச்சி அல்லது வேம்பு பேஸ்ட் பயன்படுத்துங்கள்' என்று ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கும் போது, அது வேப்ப எண்ணெயை வெளியிடுகிறது, இது வலுவான நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது,

அது எப்படி உதவுகிறது ?

* பிளேக் உருவாவதைத் தடுக்கிறது

*ஈறுகளை வலுவாக்கும்

* துர்நாற்றத்தை நீக்குகிறது

* பற்களை வெண்மையாக்கும்

சமீபத்தில், நான் இதை என் வாய்வழி சுகாதாரத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தேன். நான் தினமும் இதைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் அதன் பலனைப் பெற வாரத்திற்கு இரண்டு முறையாவது, வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், 'என்று அவர் குறிப்பிட்டார்.

அதை எப்படி பயன்படுத்துவது ?

*வேப்ப மரத்திலிருந்து சிறிய குச்சியை உடைக்கவும்.

*பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு கழுவவும். இப்போது அதை மெல்லத் தொடங்குங்கள்.

'வேப்பங்குச்சியில் பல் துலக்கும் முன், அதில் உப்பு மற்றும் கடுகு எண்ணெயைக் கலந்து தடவலாம். இப்படி செய்வதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவாகும், 'என்று குப்தா கூறினார்.



--

செவ்வாய், 6 ஜனவரி, 2026

கால்களுக்கான பயிற்சி.

ஒரு சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இதில் அவர்கள் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது. இவர்கள் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கால் பகுதிகளில் உள்ள அதிகப்படியாக சதை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

அவ்வாறு நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அவை முறையே.... தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையை தலையின் அடியில் வைத்துக்கொண்டு இடது கையை மார்புக்கு நேரே தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.

வலது காலை 'எல்' வடிவத்தில் மடித்து வையுங்கள். மூச்சுக் காற்றை உள் இழுத்தபடி இடதுகாலை மேலே உயர்த்துங்கள். மூச்சுக் காற்றை வெளியே விட்டபடி காலைத் தரையோடு தரையாக இறக்கி விடுங்கள். இதேபோல் 10 தடவை செய்யுங்கள். நன்கு பழகிய பிறகு 25 முறை செய்யலாம். இதை ஒரு பக்கமாகச் செய்தால் மட்டும் போதும்.

இடது காலை உயர்த்தி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

பலன்: இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை பலப்படுத்தும். பிரசவ நேரத்தில் முதுகு இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் சிறு வலிகளை தடுக்கும். தொடை இடுப்புத் தசைகளை இலகுவாக்கும். கர்ப்ப நேரத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை விரட்டும்.



--

சனி, 3 ஜனவரி, 2026

லேப்டாப் கீபோர்டைசுத்தம் செய்ய சில வழி முறைகள்.

லேப்டாப் சாதனங்களை பொறுத்த வரையில் அவ்வப்போது சுத்தம் செய்தால் அதன் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக மாறிவது லேப்டாப்பும், கம்ப்யூட்டரும் தான். அதுவும் இந்த கொரோனா வந்ததிற்கு பிறகு லேப்டாப் மட்டும் தான் கதி என்று இருக்கிறோம். நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருட்களில் மற்ற இடங்களில் இருக்கும் கிறுமிகளை விட பல மடங்கு அதிகமாக இருக்குமாம்.

அதனால், மவுஸ், கீபோர்டு, கம்ப்யூட்டர் போன்றவற்றை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் என நோய் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கிறது. அதிக விலை கொண்ட பொருள் என்பதால் சற்று கவனத்தோடு சுத்தம் செய்வது நல்லது. இப்போது, லேப்டாப், கீபோர், மவுஸ் போன்றவற்றை எப்படி பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்று இப்பதில் விரிவாக பார்க்கலாம்.

ஸ்டெப் 1: முதலில் உங்கள் லேப்டாப்பை ஷட் டவுன் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்க லேப்டாப் பேட்டரி அகற்றுவது போல இணைக்கப்பட்டிருந்தால், பேட்டரியை அகற்றிக் கொள்ளவும். அப்படி அகற்ற முடியாதவாறு அட்டாச்டு பேட்டரியாக இருந்தால் அகற்ற தேவையில்லை.

ஸ்டெப் 2: லேப்டாபின் கருப்பு ஸ்கிரீனின் மீது மைக்ரோஃபைபர் துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். துணியை சதுர வடிவில் மடித்துக் கொண்டு இடது வலமாக லேப்டாப்பின் ஒரு மூலையிலிருந்து மறுமுலை வரை துடைக்கவும்.

துணியை நன்றாக உதறிவிட்டு, மறுபடியும் மேலிருந்து கீழாகத் துடைக்கவும். இவ்வாறு திரை முழுவதும் துடைக்க வேண்டும். குறிப்பாக, ரொம்ப அழுத்தம் துடைக்கக் கூடாது. ஏனெனில் ஸ்கிரீனில் கீரல்கள் விழ வாய்ப்புள்ளது.

குறிப்பு: எக்காரணத்திற்காகவும் லேப்டாப் ஸ்கிரீனை துடைக்க நியூஸ் பேப்பர், டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது

ஸ்டெப் 3: இப்படி துடைக்கும் போது ஸ்கிரீனில் ஏதேனும் எண்ணெய் பசை இருந்தால், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை காய்ச்சி, (ரொம்ப சூடாக இருக்க கூடாது) அதில் மைக்ரோஃபைபர் துணியை நனைத்து, நன்றாக பிழிந்து அதை முன்பு கூறியது போலவே இடது-வலது, மேல்-கீழ் என்ற திசையில் துடைக்கவும்.

குறிப்பு: இப்படி செய்வதற்கு முன்பு உங்களுடைய லேப்டாப் அணைந்திருக்கிறதா அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4: கீபோர்டை சுத்தம் செய்ய, கடைகளில் விற்கும் அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

குறிப்பு: லேப்டாப்பை வாரத்திற்கு மூன்று முறையாச்சும் சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், எந்த கெமிக்கலையும் நேரடியாக தெளிக்க கூடாது. துணியில் தொட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

எத்தில் ஆல்கஹால், அசிட்டோன், அமோனியா, எத்தில் அமிலம், மெத்தில் குளோரைடு, மெத்தில் ஆல்கஹால், டோலுயீன் போன்ற கெமிக்கல் உள்ள கிளீனர்களை பயன்படுத்த வேண்டாம்.



--

திங்கள், 29 டிசம்பர், 2025

தவிர்க்க முடியாத டயப்பர் ரேஷ் - சிணுங்கும் குழந்தையை கவனியுங்கள்.

முன்பெல்லாம் காட்டன் துணிகளையே குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. டாக்டர்ளும் டயப்பர் பயன் படுத்துவதை ஊக்குவிக்க மறுப்பர்.

இதனால் டயப்பர் பயன்படுத்துவது என்பது பயண நேரங்களுக்கு மட்டும் என்றிருந்தது. ஆனால், இன்றைக்கோ இது அன்றாட வழக்கமாகிவிட்டது. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டாலும் இதன் உபயோகம் அதிகரித்தே வருகிறது. வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு முக்கிய பாதிப்பு டயப்பர் ரேஷ்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவீர்கள் என்றால், குழந்தை அடிக்கடி சிணுங்கி அழுதால், ரேஷ் பிரச்னையா என முதலில் கவனியுங்கள். இது குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான வலி நிறைந்த தோல் அலர்ஜி போன்ற புண் ஆகும். பாதிப்பு மோசமடைவதைத் தடுக்க டயப்பர் ரேஷிற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதை பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.ரேஷ் பாதிப்பு! டயப்பர் ரேஷ் என்பது சிவப்பு, வலிமிகுந்த புண்.

இது சூடான, ஈரமான சூழலில் வரக்கூடியது. தொடை மற்றும் புட்டம் பகுதியை பாதிக்கும். பாதிக்கப்பட்ட தோல் செதில்களாகவோ, சிறு பருக்கள் உடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கலாம். டயப்பரில் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது, அதை நீண்ட நேரம் சுத்தம் செய்யாமல் இருந்தால் டயப்பர் ரேஷ் உண்டாகும்.

ஈஸ்ட் என்னும் தொற்றுநோயால் இது வருகிறது.தோல் அலர்ஜி தோல் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு டயப்பர் ரேஷ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், மேலும் அவை அடிக்கடி ஏற்படும். இவை கவனிக்காமல் விட்டால் மிக வேகமாக மோசமான பாதிப்பை உண்டாக்கி சிவப்பு புள்ளிகள், தடிப்புகள் கொண்ட புண்ணையும் ஏற்படுத்தி, இடுப்பு முதல் கால் வரை பரவகூடும். டயப்பர் ரேஷ் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு விரைவாகவும் திறமையாகவும் கையாள்வது குறித்து அறிந்து கொள்ளது நல்லது. பராமரிப்பு முறை!

குழந்தை ரேஷஷால் கஷ்டப்படும் போது கண்டிப்பாக டயப்பர் அணிவிக்க வேண்டாம். மேலும் அதன் சருமத்தை இறுக்கி பிடிக்கும் ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிகப்படியாக ரேஷஷ் இருந்தால் ஆடை அணிவிக்காமல் மெல்லிய துணியை கட்டி விடலாம். ஒவ்வொரு முறையும் குழந்தை இயற்கை உபாதை கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவி சருமத்தை உலர வைப்பது மிகவும் அவசியம்.தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த நிவாரணியாக கூறப்படுகிறது. ஏனென்றால்இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்றை எதிர்த்து போராடும் தன்மை தேங்காயெண்ணெயிற்கு உண்டு. அது ஒரு இயற்கை மாய்சுரைசர் என்று கூட சொல்லலாம். அதோடு இவை பக்கவிளைவில்லாதது.

சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்லும். இரவு உறங்க செல்லும் முன் குழந்தையின் அடிப்பகுதியிலிருந்து தொடைவரை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து, தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத சூழலில் வெளியில் செல்ல நேரும் போது டயப்பர் அணிவிப்பதற்கு முன்பு குழந்தையின் பின் பகுதி மற்றும் தொடையில் தேங்காயெண்ணெய் தடவ வேண்டும். அதன் பிறகு டயப்பர் அணிவித்தால் பாதிப்பு அதிகரிக்காது. இவையெல்லாம் தாண்டி டயப்பர் ரேஷ் அதிகமாக இருந்தால் டாக்டரை அணுகி அவர்கள் தரும் ஆயின்மெண்டை பயன்படுத்தி பாதிப்பை சரி செய்யலாம். ரேஷை தவிர்க்க குழந்தைகளின் டயப்பரை தவறாமல் மாற்றுவதை உறுதிப்படுத்திக்  கொள்ளுங்கள்.



--

உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் பிடிவாதமாக உள்ளார்களா? அவர்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் என்றாலே ஏதாவது ஒரு பொருளை கேட்டு பிடிவாதம் பிடிக்க தான் செய்வார்கள். அவர்களை சமாளிப்பது என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலை. ஒரு ஆய்வின்படி குழந்தைகளின் 8 வயது வரை அவர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்குமாம். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் கோபம் பிடிவாதமாக மாறுகிறது. உங்கள் குழந்தைகள் ஒரு விஷயத்திற்காக அடம்பிடிக்கும் போது நீங்கள் அவரை அடிக்கவோ, திட்டவோ கண்டிக்கவோ கூடாது. அதனால் எந்த பயனும் கிடையாது. அவர்களின் பிடிவாதம் குறையும் வரை காத்திருப்பது தான் நல்லது. குழந்தைகளுக்கு பெற்றோர்களின் நிலை எப்போதும் புரியாது. அந்த நிலைமையில் குழந்தைகளின் பிடிவாதம் சற்று குறைந்த பிறகு அவர்களிடம் பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். மாறாக உங்களின் கோபத்தை அவர்களிடம் காட்டுவது எந்த விதத்திலும் பயனளிக்காது.

முதலில் குழந்தைகள் எந்த விஷயத்திற்காக பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்பதை பொறுமையாக அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு ஏற்றவாறு நாம் திட்டமிட வேண்டும் .முதலில் குழந்தைகள் ஏதேனும் ஒரு பொருளை வேண்டி அடம்பிடித்தால் அந்த பொருள் தேவைப்பட்டால் மட்டும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வாங்கி கொடுப்பது அவர்களுக்கு தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும். அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக பொம்மை, சாக்லேட் போன்றவற்றை அதிகளவில் வாங்கி குவிக்காமல் அளவாக வாங்கிக் கொடுத்து அவர்களை சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றை சில சமயங்களில் குழந்தைகளுக்கு தரும் பெற்றோர்கள் இதை வழக்கமாக கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் பொருளை வாங்கி கொடுக்க முடியாத நிலையில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக குழந்தைகளுக்கு வேறு ஏதாவது பொம்மையை கொடுத்து சமாதானம் செய்வது, இல்லையென்றால் வேடிக்கை காட்டுவது போன்றவற்றை செய்து அவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவர்களின் பிடிவாதம் சற்று குறையும். குழந்தைகள் அடம் பிடிக்கும் பொழுது 'நீங்கள் நல்ல குழந்தைதானே' 'சொன்னால் கேட்டுக் கொள்வீர்கள் தானே' என்று கூறி அவர்களிடம் அன்பை காண்பித்து அவர்களின் பிடிவாதத்தை குறைக்க வேண்டும்.



--

வெள்ளி, 26 டிசம்பர், 2025

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் Vs கிளாஸ் வாட்டர் பாட்டில்: தினசரி பயன்பாட்டிற்கு எது சிறந்தது?

நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் இன்னும் தொடர்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது நம்மை ஆரோக்கியமாகவும், நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இருப்பினும் நம்மில் பலரும் தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிக்க மறந்து விடுகிறோம் அல்லது தாகம் எடுக்கவில்லை என்பதால் தவிர்த்து விடுகிறோம். வெளியில் செல்லும் போதெல்லாம் ஒரு பாட்டில் தண்ணீரை கையில் எடுத்து செல்வது நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதை எளிதாக்குகிறது. இந்த நாட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் ட்ரெண்டியாக உள்ளன. மேலும் வாட்டர் பாட்டில்கள் அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய பொருளாக மாறி இருக்கிறது.

நம் ஆரோக்கியத்தின் இன்றியமையாத ஒன்றாக நீரேற்றம் இருப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் கூடவே எடுத்து செல்ல லாங்-லாஸ்டிங் ரீயூசபிள் பாட்டிலை வைத்து கொள்வது அவசியம். ஆனால் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அடிப்படையில் எந்த மாதிரியான வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்?

கிளாஸ் வாட்டர் பாட்டில்:

மெட்டல் அடிப்படையிலான வாட்டர் பாட்டில்களை போல கிளாஸ் வாட்டர் பாட்டில்கள் தண்ணீரின் சுவையை மாற்றாது. வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகி உள்ள ஒரு அறிக்கை, கண்ணாடி உடைந்து போகாமல் இருந்தால், கிளாஸ் வாட்டர் பாட்டில் பயன்படுத்துவது சிறந்த வழி என்று கூறுகிறது. கண்ணாடி இயற்கையான பொருட்களால் ஆனது என்பதால், அதை சூடாக்கும்போது அல்லது குளிர்விக்கும் போது கனிம ரசாயனங்கள் திரவங்களில் கசியும் அபாயம் இல்லை என்பது சிறப்பு. கிளாஸ் பாட்டில் உடைந்து விடும் என்று நீங்கள் கவலைப்பட்டால் கிளாஸ் வாட்டர் பாட்டில்களில் ஹீட்-ரெசிஸ்டன்ட் அல்லது ஷட்டர்ப்ரூஃப் ஆப்ஷன்களை நீங்கள் பார்க்கலாம்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள்:

மெட்டல் பாட்டில்கள் அலுமினியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (துருவேறா எஃகு) என்றும் அறியப்படுகிறது. இவை பற்றி வாஷிங்டன் போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, அவை மீண்டும் பயன்படுத்தக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை, எனினும் இவை greenhouse gas emissions-ஐ உருவாக்குகிறது. இது புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்களிப்பாக அமைகிறது.

மேலும் திரவத்தில் அலுமினியத்தின் சிறிய பரிமாற்றம் இருக்கலாம். சமையல் தர துருவேறா எஃகு மூலம் தயாரிக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள் கிளாஸ் அல்லது பிளாஸ்டிக்கை விட நீண்ட காலம் நீடிக்கும். அதே போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டிலை வாங்கும் போது, அதில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நிரம்பியிருக்கலாம் என்பதால் அதில் பிளாஸ்டிக் அல்லது பிசின் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் போன்ற மற்ற பொருட்களை விட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சற்று விலை உயர்ந்தது என்றாலும், அவை ஆற்றல் மிகுந்தவை. மேலும் 100% மறுசுழற்சி செய்யக்கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு பயன் படுத்தலாம்.



--

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தரையில் படுத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்.

மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத் தான் பின்பற்றினார்கள்.

தரையில் படுத்து தூங்குவதன் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மை என்னவென்றால் உடல் தோரணையை சரியாக வைத்திருப்பதுதான்.

மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க முடியாது. மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சவுகரியமாக தூங்குவார்கள். அப்படி தூங்குவது முதுகெலும்பு தோரணையை சீராக பேணுவதற்கு உதவாது. தரையில் தூங்கும்போது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதற்கு எளிதாக இருக்கும்.

ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. தரையில் படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கும். இருப்பினும் முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர் தலையணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதாவது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம் உண்டாகும். அதனால் முதுகுவலி அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.

தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை வழங்கும். அதாவது தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் அதிக உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இந்த தூக்கமுறை சவுகரியமாக இருக்கும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.

இருப்பினும், எல்லோரும் தரையில் தூங்கக்கூடாது. வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று தூக்க நிலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.



--

வெள்ளி, 19 டிசம்பர், 2025

டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன?

சில ஆண்டுகளுக்கு முன்பு டயர்கள் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப் பட்டன.

இதற்கு காரணம் டயர்கள் தயாரிக்கப் பயன்படும் ரப்பர் பால் நிறத்தில் இருக்கும். பிறகு சாலைகளில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு வெள்ளை டயரில் பயன்படுத்தும் ரப்பர் வலுவாக இல்லை. அதன் பிறகு தான் கருப்பு டயர்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

கருப்பு டயர்களின் வலிமை மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்க ஒரு நிலைப்படுத்தும் மூலப்பொருள் தேவைப்படுகிறது. அந்த மூலப்பொருள் கார்பன் கருப்பு தூள். இது ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய கார்பன் தூள் ஆகும்.

காற்றில் ஹைட்ரோ கார்பன்களை எரிப்பதன் மூலம் இந்த கார்பன் கருப்பு தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த தூளை சேர்ப்பதால் டயர் முற்றிலும் கருப்பு நிறமாக மாறும். டயரின் ஆயுளையும், வலிமையையும் மேம்படுத்த இந்த கார்பன் கருப்பு தூள் உதவுகிறது.

மேலும் கார்பன் கருப்பு தூள் ஆட்டோமொபைலின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வெப்பத்தை எடுத்து செல்கிறது. அதனால்தான் சாலையில் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் டயர் சாலையில் உராயும்போது உண்டாகும் வெப்பம் ஆகியவற்றினால் டயர்கள் உருகாமல் உறுதியாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் கார்பன் கருப்பு தூள் ஓசோன் மற்றும் புற ஊதா கதிர்வீச்சின் மூலம் உண்டாகும் தீங்கு விளைவுகளிலிருந்து டயர்களை பாதுகாக்க உதவுகிறது.

ஒரு வாகனத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் டயர்களும் ஒன்றாகும். ஏனெனில் அவை மட்டுமே சாலை மேற்பரப்புடன் இணைகின்றன. எனவே, டயர் நீடித்து உழைப்பதுடன், நீண்ட நாள் உத்தரவாதம் அளிப்பதும் முக்கியமானது. இதற்காகவே கார்பன் கருப்பு என்ற மூலப்பொருள், டயர் தயாரிப்பில் தேவைப்படுகிறது. இதன் காரணமாக டயர்கள் கருப்பு நிறத்தில் மட்டுமே தயாரிக்கப் படுகின்றன.


--

செவ்வாய், 16 டிசம்பர், 2025

சமையல் எரிவாயு உருளை தீரும் சமயத்தில் அதில் கசிவு ஏற்பட்டு வாடை வீசுவது ஏன்?

சமையல் எரிவாயுவிற்கு வாசனை கிடையாது. பாதுகாப்பு கருதி அதில் வாசனை சேர்க்கப் படுகிறது. இந்த வாசனை எரிவாயு கசிவை அறிய உதவுகிறது.

எரிவாயு உருளையினுள் திரவமயமான பெட்ரோலிய வாயு நிரப்புவதற்கு முன்பு வாசனை திரவம் நிரப்பப்படுகிறது. எரிவாயு வாசனை திரவத்துடன் கலந்து வாயு ரூபத்தில் வெளிவந்து அடுப்பு பர்னரில் முழுவதுமாக எரிந்து விடும்.

எரிவாயு தீர... தீர... திரவ பெட்ரோலிய வாயு குறைந்து, வாசனை திரவத்தின் சதவீதம் கூடி, பர்னரில் எரிவாயு முழுவதுமாக எரியும். அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான வாசனை வெளிவரும்.

இதுவே எரிவாயு உருளை தீரும் சமயத்தில் வாசனை அதிகமாக வெளிவருவதற்கான காரணம் ஆகும்.



--

சனி, 13 டிசம்பர், 2025

பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு வரும் பிரச்சனைகள்

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். க்ரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயணங்களால் ஆனது

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைக்கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

* பிஸ்கட்டுகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிஸ்கட் செரிமானம் ஆக, குறைந்தது ஒரு மணிநேரமாவது தேவைப்படுகின்றது.

* குழந்தைகள், இரண்டு அல்லது மூன்று பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. மற்ற உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்ப்பார்கள்.

* சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும்.

* கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

* உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவைகொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

* பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படும்.

* சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும்போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும் ஏற்படலாம்.

* சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.


--

சளிபிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு உண்மையானது?

சளி பிடித்திருந்தால் வேறு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் ? பதில் சொல்கிறார் பெங்களூரைச்...

Popular Posts